அங்கம் 1 | உருவச் சிதைப்பும் வரலாற்றுத்திரிபும்

அங்கம் 1 | உருவச் சிதைப்பும் வரலாற்றுத்திரிபும்

01:48:59
Link

About this episode

அங்கம் 1-2 |  உருவச் சிதைப்பும் வரலாற்றுத்திரிபும்


துயிலும் இல்லங்களின் மகிமை…!


தமிழரின் விடுதலையை நெஞ்சில் சுமந்து மாண்ட மாவீரர்களுக்கு துயிலும் இல்லங்கள் கட்டும் வேலைகள் 1990 ஆம் ஆண்டின் இறுதி பகுதியில் தொடங்கினாலும் 1991-ஆம் ஆண்டு முற்பகுதியில் பிரபல வரைபட கலைஞர் தேசியத் தலைவரின் சிந்தனைக்கு அமைவாக துயிலும் இல்லத்தினை வரைந்து மாதிரி செய்து கொண்டிருந்தார். அதன்படியே கட்டுமானப் பணிகளை போராளிகள் மக்கள் என அனைவரும் ஆரம்பித்தனர்.

இவ்வாறு அமைக்கப்பட்ட அலங்கரிக்கப்பட்ட இல்லங்களில் ஏற்கனவே சண்டை நடந்த இடங்களில் புதைக்கப்பட்ட மாவீரர்களை அகழ்ந்தெடுத்து புதிய இல்லங்களுக்கு கொண்டுவரும் முடிவுகளும் எடுக்கப்பட்டது. இதன் அடிப்படையில் இந்திய இராணுவக் காலப்பகுதியில் சண்டைகளில் மாண்டுபோன, அந்த இடங்களிலேயே புதைக்கப்பட்ட மாவீரர்கள் நூற்றுக்கணக்கானவர்கள் கோப்பாய், வடமராட்சி, மற்றும் வன்னி ஆகிய இடங்களில் துயிலும் இல்லங்களுக்கு கொண்டுவரப்பட்டனர். ஆரம்பத்தில் பிராந்தியங்களுக்கு ஒரு துயிலும் இல்லமாக இருந்து பின்னர் மாவட்டங்களுக்கு ஒன்று என விரிவாக்கபட்டது. பின்னர் மேலும் பல இல்லங்கள் பிரதேச ரீதியாக அமைக்கபட்டது.

முதன் முதலில் நடாத்தப்பட்ட மாவீரர் நிகழ்வில் அதாவது 1989-ஆம் ஆண்டு மாவீரர் நாளில் நினைவு கூரப்பட்ட 1657 மாவீரர்களது வித்துடல்களை துயிலும் இல்லங்களுக்கு கொண்டுவரும் பணிகள் 1991-இல் தொடங்கப்பட்டாலும் 2005-ஆம் ஆண்டுவரை அவை முற்றாக இடம்பெறவில்லை என்று கூறுகின்றார்கள் புலிகளின் முக்கிய உறுப்பினர்கள்.

பல போராட்டங்களின் ஊடாக உருவாக்கப்பட்ட மாவீரர் இல்லங்கள் இன்று சிங்கள படைகளினால் தரைமட்டமாக்கப்படுகின்றன என்பதை கேட்டு கதறுகின்றார்கள் மாவீரர்களின் பெற்றோர் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள். துயிலும் இல்லங்கள் பக்கமே போக கதிகலங்கி நின்ற படையினர் இன்று புலிகள் அழிக்கப்பட்டு விட்டதென்ற மமதையில் அரக்கத்தனமான வேலைகளை செய்கின்றார்கள். எதிரியாக இருந்தாலும் இறந்தவரின் உடலை அவர்களிடமே கையளிக்க வேண்டுமென்ற உலக மரபு இருந்தும் புலிகளின் இறந்த போராளிகளின் உடல்களை தெருத்தெருவாக இழுத்துச்சென்று அசிங்கப்படுத்தி உலக மரபையே மீறினது சிங்கள அரச படைகள். இப்படிப்பட்ட படையிடமா துயிலும் இல்லங்களின் மகிமை என்னவென்று கேட்கமுடியும். கேட்பதும் மகா தவறு.

முப்பதாண்டு காலப் போராட்டத்தில் 50,000-க்கும் அதிகமான மாவீரர்களைத் தமிழீழம் இழந்திருக்கிறது. இவர்களின் இழப்பு தேசக் கட்டுமானத்துக்கான விதைப்பாகவே தமிழர்கள் கருதி வந்துள்ளார்கள். முப்பதாண்டு கால ஆயுதப் போராட்டத்தில் தமிழ் மக்களுக்காக இந்த மாவீரர்கள் பட்ட துன்பங்கள்,துயரங்களை எவராலும் இலகுவில் அறிந்து கொள்ள முடியாதவை. மரணத்தை எதிர்கொண்டு வாழ்ந்த பண்பும் மரணத்துக்குச் சவால் விட்டு இலக்கைத் தேடிய பண்பும் இவர்களுடையது.

தமிழ்மக்களின் விடுதலைக்காக உயிர் துறந்த இந்த மாவீரர்களைக் காலம் காலமாக நினைவு கூர்ந்து பூசிக்க வேண்டியது தமிழர்களாய் பிறந்த அனைவரினதும் கடமை. ஆயுதப் போராட்டத்தின் மூலம் தமிழ்மக்களைப் பாதுகாத்தும் அவர்களின் பிரச்சினைகளை உலகறியச் செய்தும் எத்தனையோ விதங்களில் அவர்கள் செய்து விட்டுப் போன பணிகளுக்காக நன்றிக் கடனைச் செலுத்தும் வாரம் தான் இந்த மாவீரர் வாரம்.

தாயகத்தில் மாவீரர்களின் எந்தவொரு அடையாளச் சின்னத்தையும் இல்லாமல் செய்து விடுவதில் சிங்களப் பேரினவாதம் வெற்றி கண்டுள்ளது. தாயகத்தில் இருந்த அத்தனை மாவீரர்களின் நினைவாலயங்களும் அழிக்கப்பட்டு மண்ணோடு மண்ணாக்கப்பட்டு விட்டன. ஈழத்தில் மாவீரர்களை நினைவு கூருவதற்கு சிங்களப் பேரினவாத அரசு ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை. இந்தக் கட்டத்தில் மாவீரர்களை நினைவு கூரும் பொறுப்பு புலம்பெயர் தமிழர்கள் மற்றும் தமிழ் நாட்டில் வாழும் மானத்தமிழ் மக்களிடம் தான் உள்ளது. மாவீரர்களின் வரலாற்றைக் கட்டிக் காப்பது தொடக்கம் மாவீரர் நாள் பாரம்பரியங்களை அழிந்து விடாமல் காக்கும் பொறுப்பும் இவர்களுடையதே. இதற்கு ஒன்றுபட்ட வேலைத்திட்டங்களே அவசியம்.

ஈழ விடுதலை வரலாறு மாவீரர்களின் ரத்தத்தினால் எழுதப்பட்டிருக்கிறது. அவர்களுடைய இறப்புகள் அர்த்தமற்ற இறப்புகள் அல்ல. இந்த வீரர்களின் சாவுகள் தமிழரின் வரலாற்றை இயக்கும் உந்துசக்திகளாக அமைந்துவிட்டன. அந்த மாவீரர்கள் காலத்தால் அழியாதவர்கள். சுதந்திரச் சிற்பிகள். தமது மண்ணிலே ஒரு மாபெரும் எழுச்சிக்கு வித்திட்டுச் சென்ற வீரமறவர்கள். தமது இனத்தின் சுதந்திரத்திற்காகவும் பாதுகாப்புக்காகவும் தமது இன்னுயிரை ஈந்தவர்கள் அவர்கள். இந்த மகத்தான தியாகிகள் காலம் காலமாக தமிழரின் இதயக் கோயிலிலே பூசிக்கப்பட வேண்டியவர்கள்.


Hosted on Acast. See acast.com/privacy for more information.